Thursday, February 16, 2012

16.சாய் திருப்புகழ்



( ராகம் : செஞ்சுருட்டி
மெட்டு : அருணகிரி நாதரின் திருப்புகழ் : நாத விந்து கலாதி  நமோ நம..! )


புட்டபர்த்தி நிவாசா நமோ நம .. கேட்ட வரம் தரும் ஈசா நமோ நம 
மாய மானுஷ வேஷா நமோ நம.. அருள் செய் சாயீசா..!

விண்ணைப் படைக்கின்ற மெய்யான சிறப்பு நீ .. மண்ணில் வருகின்ற தெய்வத்தின் பிறப்பு நீ
கண்ணில் காணாது சென்றாலும் என்றும் நீ… நெஞ்சில் உறைவாயே ..!

வேத மந்திரம் இசையோடு ஓதலால் .. காதில் தேன்வந்து பாய்கின்ற தாதலால்
ஈர நெஞ்சாலே நாம் கொண்ட காதலால் .. காட்சியும் கொடுப்பாயே ..!

வேத மந்திரம் ஓதாத போதிலும் .. போதன் உன்பதம் நினையாத நாளிலும்
பேதம் மனதினில் இல்லாத சேவையால் .. மகிழ்ந்தே அருள்வோனே ..!

மனதின் நோய்களைத் தீர்க்கின்ற தெய்வம் நீ .. உடலின் நோய் தீர்த்து அணைக்கின்ற தாயும் நீ
எனது நான் என்ற எண்ணத்தைப் போக்கு நீ .. உன்னில் சேர்ப்பாயே ..!

உயிரின் பசிபோக்கும் அன்னத்தின் பூரணி .. அறிவின் பசி போக்கும்  சரஸ்வதி தேவி நீ 
விரைவில் கிடைக்காத வானத்தின் ஜோதி நீ.. எம்முள் இரு தாயே ..!

பார்புகழ் பாரதம் தோன்றிடும் தெய்வம் நீ.. ஓர் இணை இல்லாத திறத்திலே மன்னன் நீ 
பாரினில் நீர் தந்து காத்திடும் மேகம் நீ .. தாகம் தீர்த்தாயே ..!

அண்டம் படைத்திங்கு எல்லாமு மானவன் அணுவின் உள்ளேயும் அணுவேநீ ஆனவன்
தொண்டரின் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன் .. எம்மைக் காப்பாயே ..!

தோன்றி வளர்கின்ற சுயமான சோதி நீ .. என்றும் உறைகின்ற விதமான ஆதி நீ
மண்ணில் பிறக்கின்ற யாவிலும் உயிரும் நீ .. உயிரின் உயிர் நீயே ..!

போற்றி போற்றி நின் பாதங்கள் போற்றியே .. வெற்றி வெற்றி எம் நெஞ்சில் நீ நின்றிட 
சாற்றி சாற்றிப் பறை செய்வோம் நாங்களே .. அருள் செய் சாயீசா..!



No comments:

Post a Comment